ஒருகால பூஜை நடக்கும் 10,000 கோவில்களின் பூசாரிகளுக்கு தமிழக அரசு இலவச சைக்கிள்!
சென்னை: தமிழகத்தில் ஒருகால பூஜை நடக்கும் சுமார் 10,000 கோவில்களின் பூசாரிகளுக்கு இலவச சைக்கிளை தமிழக அரசு வழங்கவுள்ளது.
தமிழகத்தில் 11,000 இந்துக் கோவில்களில் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. இதற்கு கிராம மக்களின் நன்கொடை மூலம் ரூ.2,500 வழங்கப்படுகிறது.
இந்தக் கோவில்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் தலா ரூ.22,500 வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையான ரூ.250 பூசாரிகளுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந் நிலையில் ஒருகால பூஜை நடத்தும் இந்தக் கோவில்களின் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு விரைவில் செயல்படுத்தவுள்ளது.
இதற்காக இந்து அறநிலையத்துறை ரூ.3 கோடி செலவில் 10,000 சைக்கிள்களை வாங்கவுள்ளது.
ஒரு கால பூஜை நடத்தும் பூசாரிகள் கோவில்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாலும், அவர்களது வருமானம் மிகவும் குறைவு என்பதாலும் இந்த இலவச சைக்கிள்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.