பிகாரில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது ஊழல் வழக்கு
பாட்னா: பிகார் மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிகார் மாநில ஐஏஎஸ் கேடரைச் சேர்ந்த அதிகாரியான கே.செந்தில்குமார் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை இயக்குனராக உள்ளார்.
முன்பு பாட்னா மாநகராட்சி கமிஷனராக இவர் இருந்தபோது விதிமுறைகளை மீறி 130 கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்தது, மற்றும் மாநகராட்சிக்கு தேவையான வாக்கிடாக்கிகள், தெரு விள்க்குகள், பம்புகள் போன்ற பொருட்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
மேலும் குப்பைகளை அகற்றுவதற்கு காண்ட்ராக்ட் தந்ததிலும், பயோமெட்ரி்க் அடையாள அட்டைகள் வழங்க மிக அதிகமாக நிதியை ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கி கமிஷன் அடித்ததும் தெரியவந்தது.
இது குறித்து பிகார் ஊழல் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த முறைகேடுகளால் மாநகராட்சிக்கு ரூ. 8.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது.
இதையடுத்து செந்தில்குமார் மற்றும் 13 அதிகாரிகள் மீதும் ஊழல் கண்காணிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.