ஆகஸ்டில் மேட்டூர் அணை திறக்கப்படும்-வீரபாண்டி ஆறுமுகம்
சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். அதன்படி இந்தஆண்டு இதுவரை வழங்க வேண்டிய தண்ணீரை அவர்கள் வழங்கவில்லை. கிணறு, ஆழ்துளை கிணற்று நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இப்போது டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீரை எதிர்பார்த்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணை நிச்சயம் திறக்கப்படும் என்றார்.
இதனிடையே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளது. விநாடிக்கு 1188 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து விநாடிக்கு 1003 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 82 அடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.