டெல்லியில் ஸ்டாலின்-ஆனால், முதல்வர்கள் கூட்டம் ரத்து!
டெல்லி: விலைவாசியைக் கட்டுப்படுத்துவது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் அமைக்கப்பட்ட 10 மாநில முதல்வர்கள் மாநாட்டிலும், பிரதமர் தலைமையில் நாளை நடக்கும் தேசிய மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டத்திலும் கலந்து கொள்ள துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
ஆனால், குஜராத் அமைச்சர் அமித் ஷா போலி என்கெளண்டர் விவகாரத்தில் சிபிஐயிடம் சிக்கியுள்ளதால் நரேந்திர மோடி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டார். இதனால் இன்று நடக்க இருந்த முதல்வர்கள் கூட்டம் ரத்தாகிவிட்டது.
முன்னதாக இக் கூட்டத்திலும் தேசிய வளர்ச்சிக் கவுன்தில் கூட்டத்திலும் முதல்வர் கருணாநிதி பங்கேற்பார் என்றும் சோனியாவை அவர் சந்திக்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. ஆனால், திடீரென அவருக்குப் பதிலாக ஸ்டாலின் டெல்லி சென்றார்.
நாளை நடக்கும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தீவிரவாதம், நக்சலைட்டுகள் பிரச்சனை மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
இதற்காக நேற்று மாலை ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சென்றார்.
இரவு டெல்லி போய் சேர்ந்த ஸ்டாலினை மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ராசா, ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், நெப்போலியன், திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஏ.கே.எஸ்.விஜயன், ஆதிசங்கர், ஜே.கே.ரித்தீஷ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.