புதிய தமிழகத்துக்கு எத்தனை இடம்?: ஜெ முடிவு செய்வார்- கிருஷ்ணசாமி
நிருபர்களிடம் அவர் கூறுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். புதிய தமிழகத்துக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்து அறிவிப்பார்.
69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த பெருமை அதிமுக ஆட்சியையே சாரும். அதுவும் ஜெயலலிதாவுக்கே அந்த பெருமை சேரும். தமிழக முதல்வர் கருணாநிதி அப்போது அறிக்கையோடு நிறுத்திக் கொண்டார்.
தலித் அதிகாரிகளின் விரோத போக்காக திமுக அரசு செயல்படுகிறது. ஏற்கனவே கிறிஸ்துதாஸ் காந்தியை சஸ்பெண்ட் செய்தார்கள். இப்போது உமா சங்கரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.
மதுரை மேலூர் பகுதிகளில் கனிம வள மோசடியை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி தடுத்து நிறுத்ததாவிட்டால் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி மக்களை ஏமாற்றி வருகிறார். ஏற்கெனவே இலங்கைக்குச் சென்று வந்த நாடாளுமன்றக் குழுவினர் எதையும் சாதிக்காத நிலையில் இப்போது மீண்டும் ஒரு தூதுக் குழுவை நியமிக்க வேண்டும் என்பது ஏமாற்று வேலை.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிங்களர்களை குடியேற்றம் செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கையை அந்நாட்டு எம்.பிக்கள் வெட்டவெளிச்சமாக்கி உள்ளனர்.
இதுவரையில் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித நன்மையும் செய்யவில்லை. எனவே, இப்போது இலங்கை அரசு மீது ஐ.நா. விசாரணை நடத்த இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். அந்த ஒரு கடமையையாவது தமிழக முதல்வர் செய்ய வேண்டும் என்றார்.