'ப.சிதம்பரத்துக்கு ஓர் அரிய வாய்ப்பு': ராமதாஸ்
சென்னை: ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு உள்துறை அமைச்சராக உள்ள ப. சிதம்பரத்துக்கு கிடைத்துள்ளது. ஆனால், அவர் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவரை வரலாறு மன்னிக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் நடந்த இடஒதுக்கீடு தொடர்பான கூட்டத்தில் அவர் பேசுகையி்ல்,
69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ரூ. 500 கோடி செலவாகும் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜனார்த்தனம் கூறியுள்ளது சரியல்ல. கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தினால் 2 மாதங்களில் ஜாதிவாரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்கலாம். இதற்கு ரூ. 10 கோடிக்கு மேல் செலவே ஆகாது.
இட ஒதுக்கீடு கொள்கைக்காக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி துணிவுடன் போராடி வருகிறார்.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1921ம் ஆண்டில் தான் கடைசியாக ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு உள்துறை அமைச்சராக உள்ள ப. சிதம்பரத்துக்கு கிடைத்துள்ளது. ஆனால், அவர் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவரை வரலாறு மன்னிக்காது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications