உள்ளாட்சி இடைத்தேர்தல்-திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி
சென்னை: தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 258 உள்ளாட்சி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. வியாழக்கிழமை இத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
திருச்சி மாநகராட்சி 28வது வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு நகராட்சிகளில் 11 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில், திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டில் திமுக வேட்பாளர் அகிலா வெற்றி பெற்றுள்ளார். சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் 3ம் நிலை நகராட்சியில் உள்ள 11வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் அழகிரி வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்து இடைத்தேர்தலில் ஊரப்பாக்கம், ஒரத்தூரில் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காட்டான்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவராக அ.திமு.க. ஆதரவு பெற்ற பெருமாள், தி.மு.க., வேட்பாளரை விட 72 ஓட்டுக்கள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இது போல் ஒரத்தூர் பஞ்சாயத்துத் தலைவராக சீனிவாசன் என்ற அ.தி.மு.க. ஆதரவு பெற்றவர் வென்றார்.












Click it and Unblock the Notifications