குறுவை சாகுபடி-ஆடிப்பெருக்கு: 28ம் தேதி மேட்டூர் அணை திறப்பு
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அணையில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அந்தத் தேதியில் திறக்கப்படவில்லை.
பொதுவாக 50 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருந்தால்தான் மேட்டூர் அணை திறக்கப்படும். தற்போது 44 டி.எம்.சி.தான் தண்ணீர் தான் உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்தது.
இதையடுத்து கர்நாடாகத்திடம் இருந்து தமிழகத்துக்குரிய நீரை பெற பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கர்நாடக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் கர்நாடக முதல்வர் எதியபரப்பாவுக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதில், காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி மேட்டூர் அணைக்கு இதுவரை 40,000 மில்லியன் கன அடி தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால், 12,000 மில்லியன் கன அடி தண்ணீரே வந்துள்ளது. மீதம் 28,000 மில்லியன் கனஅடி தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந் நிலையில் இப்போது 82 அடி நீர் மட்டமே இருந்தாலும் ஆடிபெருக்கையொட்டி தண்ணீர் திறந்து விடவும், அதைத் தொடர்ந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீரைத் திறந்துவிடவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வரும் ஆகஸ்டு மாதம் 3ம் தேதி தமிழக மக்களால் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்படுவதையொட்டி, மேட்டூரில் இருந்து காவிரியில் 28-7-2010 அன்று தண்ணீர் திறந்துவிடப்படும்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்காக தண்ணீர் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.