ஆந்திர அரசியலில் திருப்பம்-சிரஞ்சீவியுடன் கை கோர்க்கிறார் மோகன்பாபு
ஆந்திர திரையுலகில் பல துருவங்கள் உண்டு. அதில் இரண்டு சிரஞ்சீவியும், மோகன்பாபுவும். அதேபோல அரசியலிலும் இருவரும் வேறு வேறு முனைகளில்தான் உள்ளனர்.
மோகன்பாபு அரசியலுக்கு வந்தபோது ஆரம்பத்தில் தெலுங்குதேசத்தில் இணைந்தார். அவரை எம்.பியாக்கினார் என்.டி.ஆர். பின்னர் சந்திரபாபு நாயுடு கட்சியைக் கைப்பற்றியபோது வெளியேறினார் மோகன்பாபு. அதன் பின்னர் அவர் எந்தக் கட்சியிலும் சேரவில்லை.
இவரது புதல்வர்கள் இப்போது பிசியான நடிகர்களாக உள்ளனர். மோகன் பாபு தனது சொந்த ஊரான திருப்பதிலேயே தங்கியுள்ளார். அங்கு கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், சமீப காலமாக இருவரும் நெருங்கி வரத் தொடங்கினர். குறிப்பாக தனித் தெலுங்கானா போராட்டம் வெடித்தபோது இருவரும் ஐக்கிய ஆந்திராவுக்காக குரல் கொடுத்தனர். இது தற்போது இருவருக்கும் இடையே நட்பை பலப்படுத்தியுள்ளதாம்.
2 நாள் பயணமாக திருப்பதி வந்த சிரஞ்சீவியை, தனது வீட்டிற்கு வருமாறு மோகன்பாபு அழைத்தார். இதை ஏற்று சிரஞ்சீவியும், மோகன்பாபு வீட்டுக்குச் சென்றார். அங்கு நேற்று இரவு சிரஞ்சீவிக்கு இரவு விருந்து கொடுத்துக் கெளரவித்தார் மோகன்பாபு.
பின்னர் இருவரும் தனியாக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்துள்ளனர். மோகன்பாபுவுக்கு திருப்பதி சொந்த ஊர். அதேசமயம், சிரஞ்சீவிக்கு சொந்தத் தொகுதி என்பதால் இந்த நெருக்கமும், நட்பும், புதிய கூட்டணிக்கு அச்சாரமாக கருதப்படுகிறது.
இருவரும் இணைந்து அரசியலில் புதிய பாதையைப் போடலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த டபுள் இம்பாக்ட் ஆந்திர அரசியலில் என்ன மாதிரியான விளைவுளை ஏற்படுத்தும் என்பது போகப் போகத்தான் தெரியும்.