பள்ளியை தனியாருக்கு விற்க முயற்சி: அனைத்து கட்சி சாலை மறியல்
எட்டையபுரம்: எட்டையபுரம் பள்ளியை தனியாருக்கு விற்க முயற்சிப்பதை கண்டித்து அனைத்து கட்சியினர் மறியல் செய்தனர்.
எட்டையபுரத்தில் ராஜா சமஸ்தானம் சார்பில் நிர்வாகிக்கப்பட்டு 115 ஆண்டு பழமை வாய்ந்த மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் சுற்றுபட்டியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த பள்ளியை தனியார் ஒருவருக்கு விற்க பள்ளி நிர்வாகம் முடிவு எடுத்து அதற்கான பத்திர பதிவு ஏற்பாடுகளை செய்து வந்தது. இது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளியை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 26-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சியினர் அறிவித்தனர்.
அதன்படி நேற்று காலை எட்டையபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்புள்ள ரோட்டில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ரவிசந்திரன், விளாத்திகுளம் டி.எஸ்.பி. ராஜமன்னார், எட்டையபுரம் தாசில்தார் மங்களம், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளியை தனியாருக்கு விற்க கூடாது, அரசே ஏற்று நடத்த வேண்டும், தனியார் யாரும் அங்கு பிளாட் போட அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்துஅவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.