தவறான ஜாதிச் சான்றிதழை சமர்ப்பித்த காங்கிரஸ் எம்.பி. தகுதி நீக்கம்
கொச்சி: மனுத் தாக்கலின் போது தவறான ஜாதிச் சான்றிதழை சமர்ப்பித்த கேரள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கொடுகுன்னில் சுரேஷ் நேற்று தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இவர் கேரளத்திலிருந்து 5 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இவர் மாவேலிக்கரா தனித் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அனில் குமார் உள்ளிட்ட 2 வேட்பாளர்கள் இவர் வெற்றிபெற்றதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
மாவேலிக்கரா தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி. கொடுகுன்னில் சுரேஷ் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்த ஜாதிச் சான்றிதழில் அவர் செராமர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று இருந்தது. ஆனால் இந்த சமுதாயம் தாழ்த்தப்பட்டோர் ஜாதிப் பட்டியலிலேயே இல்லை.
எனவே இது குறித்து தொடரப்பட்ட வழக்கிற்கு நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். சசிதரன் நம்பியார், சுரேஷை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதாக தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பின் விவரம் பின் வருமாறு,
சுரேஷ் குறிப்பிட்டிருக்கும் சமுதாயம், தாழ்த்தப்பட்டோர் ஜாதிப் பட்டியலிலேயே இல்லை. மனு தாக்கல் செய்தபோதே அதிகாரிகள் இதை பரிசோதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
தனித் தொகுதியில் அவர் வெற்றிபெற்றுள்ளது செல்லாது என்பதால் தகுதி நீக்கம் செய்வதாக நீதிபதி கூறினார். இந்த உத்தரவு குறித்து மக்களவைத் தலைவருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.