கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கலவரத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை-கருணாநிதி

திருவாரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி ரூ. 100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இன்று முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைத்த முதல்வர், புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
பின்னர் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பேசினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கோ.சி.மணி, பொன்முடி, சிபிஐ எம்.எல்.ஏ சிவபுண்ணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவபுண்ணியம் பங்கேற்று தனது வட்டாரப் பிரச்சனைகளைப் பற்றி பேசினார். சிவபுண்ணியம் இந்த விழாவிலே கலந்துகொண்டதே பாராட்டத்தக்க ஒன்று. பாராட்டுவதே தவறான ஒன்று. பாராட்டினால் கட்சி தலைமையிலேயே நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். கட்சியை விட்டே விலக்கிவிடுவார்கள். நம் பிரிவில் அப்படி இல்லை.
ஆனால் இன்னொரு பிரிவில் அப்படிப்பட்ட தீர்மானங்களை போட்டுக்கொண்டு நடவடிக்கை எடுத்து விடுவார்கள். அப்படி விலக்கினாலும் சிவபுண்ணியம் கவலைப்பட மாட்டார். நான் எங்கும் செல்வேன்; எங்கும் குரல் கொடுப்பேன் என்ற தைரியம் உள்ளவர் சிவபுண்ணியம் என்பதை நான் அறிவேன்.
ஏதோ கருணாநிதி சூழ்ச்சி செய்து மாட்டிவிடுகிறேன் என்று சிவபுண்ணியம் கருத மாட்டார். என்னுடைய உள்ளம் அவருக்கு புரியும். அவருடைய தூய உள்ளம் எனக்குப் புரியும். எனவே அத்தகைய கலவரத்தில் இறங்க நான் விரும்பவில்லை.
பொதுவாக, பாலம் கட்டவேண்டுமென்றால், வாய்க்கால் வெட்ட வேண்டுமென்றால் அது பொதுவான விசயம். அதில் அரசியல் இருக்கக்கூடாது.
இப்படிப்பட நல்ல விசயங்களை அரசு செய்யும் போது அதில் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளை தள்ளிவைத்து விட்டு எல்லோரும் பங்கேற் கவேண்டும். அப்படி பங்கேற்றால் தமிழகத்தில் இன்னும் பல நல்ல காரியங்கள் நிறைவேறும்.
என்னைப் பொறுத்தவரை நான் யாரிடத்திலும் இதற்காக மன வருத்தப்பட மாட்டேன். என்னை குறை கூறினாலும் கூட, என்னை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டினால் கூட நான் தவறை திருத்திக்கொள்வேன் என்பதை எதிர்கட்சிகளும் அறிவார்கள்.
இன்றைக்கு திருவாரூர் ரொம்ப மாறிவிட்டது. இங்குள்ள கிராமத்தை பார்க்கும் போது லண்டனில் உள்ள கிராமத்தை பார்க்கிறேனா என்ற எண்ணம் வருகிறது. எங்கு பார்த்தாலும் கட்டிடங்களாக இருக்கின்றன.
இத்தகைய மாற்றங்கள் எல்லா மாவட்டங்களிலும் வரவேண்டும். அதையெல்லாம் நான் பார்க்கமுடியாவிட்டாலும் திராவிட முன்னேற்ற கழகத்தினர் காணவேண்டும் என்று விரும்புகிறேன்.
திருவாரூரிலே இன்று நான் காணுகின்ற காட்சி உண்மையிலேயே கண்ணுக்கு குளிர்ச்சி தருகின்ற காட்சி. ஒரு காலத்தில் இங்கே பள்ளி மாணவனாக விளையாட்டுப் பிள்ளையாக திரிந்து கொண்டிருந்த நான் பெரியாரின் மாணவனாக, பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக மாறினேன்.
அவர்களின் வழியில் நடைபோட்டு இன்று தமிழக முதல்வராக உங்கள் முன்பு நிற்கிறேன். நீங்கள் தந்திருக்கின்ற பொறுப்பு முதல்வர் பொறுப்பு. இதை நல்லபடியாக செய்கின்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால்தான் இந்த மருத்துவக் கல்லூரியை திறந்துவைத்திருக்கிறேன்.
இந்த மருத்துவக் கல்லூரி திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல; தமிழகம் முழுவதற்கும்தான்.
மக்களுடையை உயிரை காப்பாற்றுவதற்காக நான் கொண்டுவந்த உயிர்காக்கும் திட்டம் கலைஞர் காப்பீட்டுத்திட்டம். அதை எதிர்கட்சிகளும் வரவேற்கின்றன என்றார் கருணாநிதி.
அழகிரி ஆர்டர்-திருவாரூர் பறந்த மதுரை திமுகவினர்
இதற்கிடையே, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் உத்தரவின் பேரில் மதுரையிலிருந்து 1000 திமுகவினர் திருவாரூருக்குப் பறந்துள்ளனர்.
இன்று தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் கருணாநிதி சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று இரவு தஞ்சையில் நடைபெறும் பிரமாண்டக் கூட்டத்தில் பேசுகிறார்.
முதல்வர் நிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மதுரை திமுகவினர் அங்கு பயணமாகியுள்ளனர். அமைச்சர் அழகிரியின் உத்தரவின் பேரில் 100 வாகனங்களில் 1000 பேரை மதுரை திமுக செயலாளர்களான மூர்த்தியும், தளபதியும் கூட்டிச் சென்றுள்ளனராம்.












Click it and Unblock the Notifications