நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு செல்போன் திருடியவர் கைது
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் வேடமிட்டு நோயாளியின் செல்போனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மேலகூட்டுடன் காட்டை சேர்ந்தவர் குருசந்திரன். இவர் இடது கை முறிவுக்காக பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து ஆர்த்தோ வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 19-ம் தேதி இரவு வார்டில் அவர் வைத்திருந்த செல்போன் திருடு போனது. இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏற்கனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பைக்குகள் திருடு போனதாலும், குழந்தை கடத்தல் சம்பவம் நடந்ததாலும் அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் அபய்குமார் சிங் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மருத்துவமனை வளாகத்தை சுற்றி தனிப்படையினர் கண்காணித்து வந்தனர். அப்போது மாலை 6 மணிக்கு மருத்துவமனை ஆர்த்தோ வார்டுக்குள் டாக்டர் உடையுடன் சென்றவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கிருபாவனம் பள்ளிகல்லையை சேர்ந்த வர்கீஸ் குஞ்சுமோன் என்பவரின் மகன் அனுப் என்பதும், 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத இவர் டாக்டர் வேடமிட்டு கடந்த 19-ம் தேதி மருத்துவமனைக்குள் புகுந்து குருசந்திரனின் செல்போனை திருடியதும் தெரிய வந்தது.
மருத்துவமனைக்குள் இதேபோல் பலமுறை புகுந்து திருடியுள்ளதாக அனுப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications