சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை-10 மருந்துக் கடைகள் மீது வழக்கு
திருப்பூர்: மருத்துவர்களின் பரிந்துரை இன்றி தன்னிச்சையாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற 10 திருப்பூர் மருந்துக் கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் பரிந்துரை இன்றி திருப்பூர் மருந்துக் கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் பாஸ்கரன் திருப்பூரிலுள்ள மருந்தகங்களில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.
உதவி இயக்குநர்கள் குணசேகரன் (கோவை), அருணாசலம் (சேலம்) ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், திருப்பூரிலுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகளில் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்போது, 10 கடைகள் விதிகளை மீறி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்தக் கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அக்கடைகள் குறித்த அறிக்கையை சென்னையில் உள்ள மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உதவி இயக்குநர் குணசேகரன் தெரிவித்தார்.
திருப்பூர் என்றால் நினைவிற்கு வருவது பனியன் தொழில் தான். இங்கு உள்ள பனியன் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து வந்து பலர் பணிபுரிகின்றனர். தகாத முறையில் கருத்தரிக்கும் இளம்பெண்கள், மருந்துக்கடைகளில் மருத்துவர் பரிந்துரை இல்லாமலே கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
மருத்துவர் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் எந்த மாத்திரையும் விற்கக் கூடாதென்று அனைத்து மருந்துக் கடைகளுக்கும், இந்திய மருந்துக் கழகம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதை எல்லாம் ஒருவரும் பொருட்படுத்துவதே இல்லை.












Click it and Unblock the Notifications