வருமான வரிக் கணக்கு தாக்கல்-சென்னையில் 40 சிறப்பு கவுன்டர்கள் திறப்பு
சென்னை: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோரின் வசதிக்காக சென்னையில் 40 சிறப்பு கவுன்டர்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.
இந்த சிறப்பு வசதி வருகிற 31ம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதச் சம்பளம் வாங்குவோர் வருகிற 31-ந்தேதிக்குள் வருமான வரி கணக்கை வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது வருமான வரித்துறையின் இணைய தளம் வழியாகவும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். தனியார்களும் கூட இத்தகைய வசதியை கட்டணம் வாங்கிக் கொண்டு செய்து தருகின்றனர்.
கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 40 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.
காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு வருமான வரி கணக்கு சரல் படிவங்களை தாக்கல் செய்யலாம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 262 பேர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர். சென்னையில் மட்டும் 2 லட்சத்து 51 ஆயிரத்து 262 பேர் தாக்கல் செய்தனர்.
இந்த ஆண்டு தென்னக ரயில்வே, விமான நிலையம், ஐ.சி.எப்., சென்னை துறைமுக பொறுப்பு கழகம், அசோக் லேலண்ட், டைடல் பார்க் உள்பட 8 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 40 ஆயிரம் பேர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக்கணக்கு தாக்கல்செய்வோர் கண்டிப்பாக தங்களது பான் கார்ட் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications