மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
சென்னை: சென்னையில் கள்ளக்காதலுக்கு மீண்டும் ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). இவர் பெருங்குடி மின் வாரியத்தில் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி முதல் இவர் திடீர் என்று மாயமாய் போனார். இதையடுத்து அவரது தாயார் செல்லம்மாள் வேளச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் மன்சூர்அலி விசாரணை நடத்தினார்.
ராஜேந்திரனுக்கு திருமணமான ஒரு மாதத்திலேயே அவரும், அவர் மனைவி அனிதாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே ராஜேந்திரனுக்கும், வடபழனியைச் சேர்ந்த பெண் போலீஸ் சாஸ்திரகனிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. சாஸ்திரக்கனியும் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார்.
ராஜேந்திரன் காணாமல் போனதை அடுத்து சாஸ்திரகனியை பிடித்து போலீசார் விசாரித்தபோது தான் அவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட விஷயம் தெரிய வந்தது.
இது குறித்து போலீசாரிடம் சாஸ்திரக்கனி கூறியதாவது:
நாங்கள் பள்ளிப்பருவம் முதல் ஒன்றாக பழகி வந்தோம், காதலித்தோம். ஆனால், அவர் பெற்றோர் எங்கள் திருமணத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே, நாங்கள் பிரிந்து வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டோம். திருமணமான சில மாதங்களிலேயே நான் என் கணவரையும், அவர் தன் மனைவியையும் பிரிந்து விட்டோம்.
அதன் பிறகு எங்களுக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இதற்கிடையில் எனக்கும் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர் வீர ராஜனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதை பற்றி அறிந்த ராஜேந்திரன் என்னை கண்டித்தார். இதை நான் வீரராஜனிடம் கூறினேன்.
இந் நிலையில் ராஜேந்திரனின் மனைவியும், மாமியார் பாக்கியமும் அவர் மீது வரதட்சணை வழக்கு போட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் பாக்கியத்தை கொல்ல சொல்லி வீர ராஜனுக்கு ராஜேந்திரன் ரூ. 1 லட்சம் கொடுத்தார்.
இது குறித்து பேசுவதற்காக ராஜேந்திரனை அழைத்துச் சென்ற வீரராஜன் அவரை கொன்று விட்டார் என்று சாஸ்திரக் கனி கூறியுள்ளார்.
இதையடுத்து வீரராஜன், அவரது கூட்டாளிகள் வேணுகோபால், முருகன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பசுபதி என்பவரை தேடி வருகிறார்கள்.
ராஜேந்திரனை கொலை செய்தது பற்றி வீர ராஜன் கூறியதாவது:
எனக்கும், சாஸ்திரகனிக்கும் இடையேயான தொடர்பை ராஜேந்திரன் கண்டித்ததால் அவரை கொலை செய்ய தீர்மானித்தோம். இந்த நிலையில் தனது மாமியாரைக் கொல்வதற்காக என்னிடம் ரூ. 1 லட்சம் கொடுத்திருந்தார் ராஜேந்திரன்.
எனவே, அது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி ராஜேந்திரனை திருத்தணிக்கு காரில் அழைத்துச் சென்றேன். எங்களுடன் என் நண்பர்கள் பசுபதி, முருகன், சதீஷ், வேணுகோபால் ஆகியோரும் வந்திருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கே.கே.புரம் எல்லப்ப நாயுடு பேட்டை சுடுகாடு அருகில் சென்று கொண்டிருந்தபோது காரை நிறுத்தி போதையில் இருந்த பசுபதியும், முருகனும் ராஜேந்திரனை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர். அதன் பிறகு ராஜேந்திரனின் உடலை சுடுகாட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டோம் என்று அவர் கூறினார்.
ராஜேந்திரன் எங்கே என்று தேடிக்கொண்டிருந்த போலீசாருக்கு அவரின் தொலைந்து போன செல்போன் மூலம் தான் துப்பு கிடைத்தது. அவரது செல்போனை பயன்படுத்துகிறவரை போலீசார் கண்டுபிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தெரிய வந்தது.