சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வுப் பேரணி
சென்னை: சென்னை வேளச்சேரியில், மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது. இதில், 210 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.மாற்றுத் திறனாளிகளும், மற்ற மாணவியரைப் போல, சாதாரண பள்ளிகளில் பயிலும் வகையில் அவர்களை உருவாக்க திட்டமிடப்பட்டதே, ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் அல்லது உள்ளடங்கிய கல்வி. இது அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை வேளச்சேரியில் இன்று ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி, திரவுபதி அம்மன் கோவில் வழியாக காந்தி சாலை மற்றும் தரமணி 100 அடி சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
பேரணியை அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்னம்மாள், உதவித் திட்ட அதிகாரி சமாதானம், வித்யாசாகர் என்ஜிஓ அமைப்பின் தீப்தி பாட்டியா, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பிஆர்டிஇஎஸ் ஆதார மைய ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் அமலி அருணா, சண்முகமூர்த்தி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகளை அரவணைக்க வேண்டும். அவர்களை மற்றவர்கள் படிக்கும் சாதாரண பள்ளிகளிலையே சேர்த்து படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குரிய சலுகைகளைப் பெற்றுத் தரவேண்டும் என பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.