கூடுதல் கட்டணம் கேட்டதால் பொறியியல் மாணவர் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கூடுதல் கட்டணம் கேட்டு கல்லூரி நிர்வாகம் மாணவனை துன்புறுத்தியதால் அவர் விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ளது எம்.என்.எஸ்.கே. தனியார் பொறியியல் கல்லூரி.
இந்த கல்லூரியில் இ.இ.இ. பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ. 19 ஆயிரம் கட்டணத்தை செலுத்த சொல்லுவதாகவும், கல்லூரியில் சேரும் பொழுது நிர்ணயித்த கட்டணத்தைவிட மேலும் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இது குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திருச்சி அண்ணா பல்கலைக்கழக இயக்குநருக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், கல்லூரிக்குச் சென்ற மாணவர்களைத் தடுத்து நிறுத்தி கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் பலரையும் கல்லூரிக்குள் நுழையவிடாமல் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியுள்ளது.
இதனால் மனமுடைந்த மாணவன் இளையராஜா (இ.இ.இ. பிரிவில் இறுதி ஆண்டு படிப்பவர்) விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.












Click it and Unblock the Notifications