மிகவும் நடுநிலையுடன் பணிபுரிந்தேன்-நரேஷ் குப்தா
சென்னை: தமிழக தேர்தல் அதிகாரியாக நடுநிலையுடன் பணிபுரிந்தேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது என்று நரேஷ் குப்தா கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து நாளை ஓய்வு பெறும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன் நைஜீரியா சென்று வந்தேன். அங்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அவர்களுக்கு இந்திய தேர்தல் முறை பற்றி விளக்கம் அளித்துள்ளேன்.
பல்வேறு அரசுத் துறைகளில் 37 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். 8 வருடங்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தேன். பொதுத் தேர்தலும், இடைத் தேர்தல்களும் மிக சவாலானவை.
இதில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மிக மிக சவாலானதாக அமைந்தது. ஆனாலும் பொதுத் தேர்தலை விட இடைத் தேர்தல்களில் தான் நான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
என் பணிக் காலத்தில் நான் நடுநிலையாளனாக பணிபுரிந்தேன் என்ற திருப்தி இருக்கிறது.
பணத்துக்காக ஓட்டுப்போடும் பிரச்சனை குறித்து பலமுறை செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். பணம் கொடுப்பதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பதற்கு நான் பதில் சொல்வதை விட புதிதாக வரும் தலைமை தேர்தல் அதிகாரி பதில் சொன்னால் சரியாக இருக்கும் என்றார்.
கேள்வி: உங்கள் அனுபவத்தை புத்தகமாக எழுதுவீர்களா?
பதில்: 37 ஆண்டுகள் அரசு ஊழியராக பணிபுரிந்த எனக்கு சிறிது ஓய்வு தேவை. நான் புத்தகம் எழுதினாலும் மற்றவர்கள் படிப்பார்களா?. என்றாலும் என் அனுபவங்களை மற்றவர்களிடம் நடைமுறையில் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
கேள்வி: நீங்கள் அரசியலில் ஈடுபடுவீர்களா?
பதில்: அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால், மிக முக்கியமான கட்டத்தில் நான் ஓய்வு பெறுகிறேன் என்றார்.