வன்னியர் சங்கத்துக்கு சீல் வைத்த அதிகாரிகளை தாக்கிய பா.ம.க.வினர்
சென்னை: கோர்ட் உத்தரவின்படி வன்னியர் சங்க அலுவலகத்தை பூட்டி சீல் வைக்கச் சென்ற அரசு அதிகாரிகளை பாமகவினர் வெறித்தனமாக தாக்கி ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த பரங்கிமலை பட்ரோடு பகுதி காசி விசுவநாதர் கோவிலுக்கு சொந்தமான 37, 930 சதுர அடி நிலம் பட்ரோடு மவுண்ட் பூந்தமல்லி சாலையில் உள்ளது. கடந்த 1979-ம் ஆண்டு இந்த நிலத்தை கோவில் நிர்வாகம் சுகந்தமணி என்பவருக்கு வாடகைக்கு விட்டது. ஆனால் அவரோ நிர்வாகத்திற்கே தெரியாமல் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகத்திற்கு அந்த நிலத்தை வாடகைக்கு விட்டதாக தெரிகிறது.
தற்போது அந்த நிலத்தில் வன்னியர் சங்க மாநில தலைமை அலுவலகம் உள்ளது. இது பற்றி அறிந்த கோவில் அறங்காவலர்கள், நிலத்தை திருப்பி தரும்படி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்றம் கோவில் நிலத்தை காசி விசுவநாதர் கோவில் அறங்காவலர்களிடம் திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் சங்கத்தை பூட்டி சீல் வைத்தனர். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் அங்கு திரண்டு வந்து அதிகாரிகளை தாக்கினர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் பா.ம.க.வினரிடம் சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டனர். அப்போது பா.ம.க.வினர் அதிகரிகள் வந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தனர்.
பா.ம.க.வினர் அதிகாரிகளை விரட்டியடித்துவிட்டு வன்னியர் சங்கத்துக்கு வைத்த சீல்களை உடைத்தனர். இந்த சம்பவத்தால் பரங்கிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.