ஆகஸ்ட் 15 முதல் மதுவிலக்கு-கருணாநிதிக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை: ஆகஸ்ட் 15ம் தேதி தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றி பேசும்போது, முழு மதுவிலக்கு அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மீண்டும் மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை, வரவேற்று பாராட்டுகிறோம்.
ஆகஸ்ட் 15ம் தேதி தலைமைச் செயலகத்தில் கொடியேற்றி பேசும்போது, குடியை ஒழித்து குடியை காக்கும் அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட வேண்டும். இதன் மூலம் குடிப் பழக்கத்தில் இருந்து மக்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும்.
காமராஜர் விரும்பிய மதுவிலக்கை மீண்டும் செயல்படுத்துவது, அவரின் நினைவைப் போற்றுகின்ற சிறந்த அணையா ஜோதியாக அமையும்.
2 ஆண்டுகளுக்கு முன், மது ஒழிப்பு தூதுக் குழுவாகச் சென்று சந்தித்தப்போது அளித்த வாக்குறுதியிலும், தற்போது அளித்துள்ள வாக்குறுதியிலும், முதல்வர் கருணாநிதி உறுதியாக நின்று செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.