தலைமைத் தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் நியமனம்
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி நரேஷ் குமார் விடைபெறுகிறார். இதையடுத்து அவரது இடத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் குமார் நியமிக்கப்படவுள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவரான நரேஷ் குப்தா தற்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.
உ.பி மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் குப்தா, பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். திமுக ஆட்சிக்காலத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வரும் நரேஷ் குப்தா, கடந்த 1991-96 அதிமுக ஆட்சிக்காலத்தின்போதும் 2 ஆண்டுகள் இப்பதவியை வகித்தவர்.
மிகவும் எளிமையான, நேர்மையான அதிகாரி என்று அனைத்துத் தரப்பினராலும் (அரசியல்வாதிகளைத் தவிர) பாராட்டப்பட்ட நரேஷ் குப்தா ஜூலை 31ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அப்பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் குமார் நியமிக்கப்படுகிறார்.
நேற்று காலை பிரவீ்ன் குமார், நரேஷ் குப்தாவை சந்தித்துப் பேசினார். இன்று பிரவீ்ன் குமார் பதவியேற்பார் எனத் தெரிகிறது.
இவரும் நரேஷ் குப்தா போலவே நேர்மையானவர் என்று அரசுத் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. பிரவீன் குமார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
1987-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். 1961-ம் ஆண்டில் பிறந்த அவர், கான்பூர் ஐ.ஐ.டி.யில் உலோகவியலில் பி.டெக், எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் எம்.பில். பட்டமும் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றபின், முதலில், 1988-ல் சேலத்தில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். 1989-ல் தஞ்சையில் சப்-கலெக்டராகவும், 1989-ல் செட்டில்மென்ட் அதிகாரியாகவும், 1991-ல் தஞ்சை கூடுதல் கலெக்டராகவும், 1996-97-ல் விழுப்புரம் கலெக்டராகவும் பணிபுரிந்தார்.
1997-ல் தொழில்துறை கூடுதல் செயலாளராகவும், 2000-த்தில் நிதித்துறையில் கூடுதல் செயலாளராகவும் பணிபுரிந்தார் பிரவீன் குமார். பின்னர், 2001-ம் ஆண்டில் டெல்லியில் மத்திய அரசு பணிக்குச் சென்ற அவர் அங்கு கல்வித்துறை இயக்குனராகவும், கம்பெனி விவகாரத்துறையில் இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
2001 முதல் 2007 வரை மத்திய அரசு பணியில் இருந்த அவர், தமிழகம் திரும்பி, நிதித்துறையில் சிறப்பு செயலாளராக இருந்தார். தற்போது, நிதித்துறையில் செயலாளராக (செலவினம்) இருந்து வருகிறார்.
இவரது மனைவி அனிதா பிரவீனும் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரிதான். பிரவீன் குமார் பணிபுரியும் நிதித்துறையிலேயே செயலாளராக (திட்டம் மற்றும் வளர்ச்சி) பணிபுரிந்து வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு பாட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.