ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்!

மதுரையில் நேற்று மறைந்த கக்கன் நூற்றாண்டு விழாவைக் காங்கிரஸார் கொண்டாடினர். இதற்காக மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டக் கூட்டமும் நடந்தது.
இதையொட்டி மதுரையின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் என திராவிடக் கட்சிகள் ரேஞ்சுக்கு அசத்தியிருந்தனர் காங்கிரஸார். ஒவ்வொரு கோஷ்டியும் தனது பலத்தை நிரூபிக்க இதை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தன. கக்கனை விட காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களின் படங்களைத்தான் அதிகம் காண முடிந்தது. கக்கன் எங்கே என்று தேட வேண்டிய நிலைதான் மக்களுக்கு.
இதில் ப.சிதம்பரம் கோஷ்டியினர் சற்று ஓவராகப் போய், பிரமாண்ட சைசிலான 500 ரூபாய் நோட்டை பிளக்ஸ் போர்டில் வடிவமைத்திருந்தனர்.
அதில் காந்தி இருக்கும் இடத்தில் ப.சிதம்பரம் மொட்டைத் தலையுடன் பளிச்சென சிரித்தபடி காணப்பட்டார். மறுபக்கம் கக்கன் படத்தைப் போட்டிருந்தனர். ப.சிதம்பரத்தின் மொட்டைப் படத்துக்கு அருகே கார்த்தி சிதம்பரம் சின்னதாக ஒட்டிக்கொண்டு காணப்பட்டார். மேலே சோனியா, ராகுல் காந்தி டத்தை ஸ்டாம்ப் சைசில் போட்டிருந்தனர்.
நிதியமைச்சராக பல வருடம் பதவி வகித்தவர் ப.சிதம்பரம். ஆனால் அவரது படத்தை ரூபாய் நோட்டு வடிவத்தில் அச்சிட்டு, மகாத்மா காந்தியையும் தூக்கி விட்டு அந்த இடத்தில் ப.சிதம்பரத்தையும், அவருக்கே அருகே கார்த்தி படத்தையும் போட்டு ரூபாய் நோட்டுக்குரிய கெளரவத்தையும், மதிப்பையும் ரொம்பவே உயர்த்தி விட்டனர் ப.சிதம்பரம் கோஷ்டிடினர்.
காங்கிரஸ்காரர்களின் இந்த கொட்ட கும்மாளத்தைப் பார்த்த மூத்த காங்கிரஸார் சிலர், கக்கன் எங்கே இவர்கள் எங்கே. அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்பதை விட இவர்களது பலத்தை நிரூபிக்கவே இந்த அடிதடி, களேபரம். கக்கனின் ஆவி கூட இவர்களை மன்னிக்காது. காந்தி படத்தையே எப்போது தூக்கினார்களோ இவர்கள் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியாது என்று வேதனையுடன் கூறினர்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன் என காங்கிரஸின் முன்னணி கோஷ்டிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். தாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதாகவும் பேசினர்.
ப.சிதம்பரம் பேசியபோது, இங்கு நடைபெற்று கொண்டிருக்கிற இந்த கூட்டம், எனக்கோ, தம்பி வாசனுக்கோ புகழ்பாடும் கூட்டம் அல்ல. கக்கனின் எளிமை, நேர்மை, திறமை, அடக்கம் ஆகியவற்றை எடுத்தும் சொல்லும் கூட்டம் என்றார்.
ஜி.கே.வாசன் பேசுகையில், 43 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாத போது கூட மக்கள் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். (மக்களுக்காக எத்தனை போராட்டங்களை காங்கிரஸ் நடத்தியது, எத்தனை காங்கிரஸ் தலைவர்கள், வாசன் உள்பட சிறைக்குப் போனார்கள் என்பதை அவர் தனது பேச்சின்போது சொல்லவில்லை)
இளங்கோவன் பேசுகையில், நமது இயக்கத்தின் தூண்களான சிதம்பரம், வாசன் போன்றோர் இந்த மேடையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது தேர்தல் வந்து விட்டது என்று எண்ண தோன்றுகிறது. இந்த மேடையை போன்று திருப்பூர், விருதுநகர் போன்ற மேடைகளிலும் ஒன்றாக தொண்டர்களிடையே பேசியுள்ளோம். விழா மிக ஆடம்பரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம். ஆடம்பரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நம்மை சிலர் நினைக்கிறார்கள், அவர்கள் நினைப்பது போன்று நாம் நடந்து கொண்டால் நிரந்தரமாகவே நாம் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றார்.
விழாவில் கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட குட்டி கோஷ்டிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கக்கனின் குடும்பத்திலிருந்து அவரது மகள் கஸ்தூரி, சகோதரர் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications