காமன்வெல்த் ஊழல் எதிரொலி-ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி மறுப்பு

தோண்டத் தோண்ட ஊழல் குறித்த செய்திகளாக வந்து கொண்டுள்ளது டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகள் குறித்து. மிகப் பெரிய அளவில் நிதி மோசடிகள் நடந்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஊழலின் அளவு பல நூறு கோடியாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
ஆனால் போட்டியை நடத்தும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடி ஒரு காங்கிரஸ்காரர் என்பதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பெரும் தர்மங்கடத்தில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் 2019ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது மத்திய விளையாட்டு அமைச்சகம் இதற்குத் தடை போட்டு விட்டதாம்.
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த அனுமதி கோரி சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத்திற்காக ரூ. 15 கோடியை கேட்டிருந்தது ஒலிம்பிக் சங்கம். ஆனால் அந்தக் கோரிக்கையை விளையாட்டு அமைச்சகம் நிராகரித்து விட்டது. இந்தப் பணத்தை வைத்துத்தான் விண்ணப்பிக்கவும், இந்தியாவுக்கு ஆதரவு சேகரிக்கும் பிரசாரத்தையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது இந்திய ஒலிம்பிக் சங்கம். ஆனால் அதை தற்போது மத்திய அரசு நிராகரித்து விட்டது.
மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி உடனடியாக விலக வேண்டும் என மத்திய விளையாட்டு அமைச்சர் எம்.எஸ்.கில் கோரியுள்ளாராம். இந்தப் பதவியை கடந்த 1996ம் ஆண்டிலிருந்து வகித்து வருகிறார் கல்மாடி.
ஆனால் அவர் உடனடியாக விலக வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமை கோரும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பே அவர் போய் விட வேண்டும் எனவும் கில் கூறியுள்ளாராம்.
வருகிற 2012ம் ஆண்டு கல்மாடியின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆனால் அதற்குள்ளாகவே கல்மாடியின் பதவியைக் காலி செய்யும் வகையில் விளையாட்டுத்துறை சட்ட மசோதாவைக் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆசிய விளையாட்டுக்கான ஏலத்தில் கலந்து கொள்வது என இந்திய ஒலிம்பிக் சங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. விளையாட்டு அமைச்சகத்துடன் அது கலந்து ஆலோசித்த பின்னரே இதை
செய்திருக்க வேண்டும் என்றும் கில் கோபத்துடன் கூறியுள்ளாராம்.












Click it and Unblock the Notifications