மும்பையில் மலேரியா, டெங்கு பரவ வெளி மாநிலத்தவரே காரணம்-ராஜ் தாக்கரே
மும்பையில் நல்லது நடந்தால் அதற்குக் காரணம் மராத்தியர்கள், ஏதாவது தவறாகப் போனால் வெளிமாநிலத்தவர் என்று பேசி வருகிறது தாக்கரே கும்பல். பால் தாக்கரேவின் சிவசேனாவும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவும் மாறி மாறி பிற மாநிலத்தவர் மீது குறிப்பாக வட மாநிலத்தவர் மீது பல்வேறு துவேஷ பிரசாரத்தையும், தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மலேரியா, டெங்கு மும்பையில் பரவ பிறமாநிலத்தவரே காரணம் என்று பேசியுள்ளார் ராஜ் தாக்கரே.
இதுகுறித்து அக்கட்சியின் இளைஞர் அணி கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசுகையில், மும்பைக்கு பிற மாநிலத்தவர் வருகை அதிகரித்துக் கொண்டே போகிறது. யார் வருகிறார், போகிறார் என்றே தெரியவில்லை. இங்கு குடிசைப் பகுதிகள் அதிகரித்து விட்டன. அங்கெல்லாம் பிற மாநிலத்தவரே குடியிருக்கின்றனர்.
இவர்களின் கூட்டம் அதிகரித்து விட்டதால்தான், சுகாதாரம் கேள்விக்குறியாகி மலேரியா,டெங்கு போன்றவை பரவத் தொடங்கியுள்ளன. இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மும்பை மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை மராட்டியர்களுக்கே சொந்தமானது என்பதை பிற மாநிலத்தவர் உணர வேண்டும் என்று பேசினார்.