வலைகளை அறுத்து தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி துன்புறுத்தியுள்ளனர். தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்தும் அட்டூழியம் செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் இலங்கை கடற்படையினர். தமிழ் மீனவர்களைத் தாக்குவதையே கிட்டத்தட்ட தங்களின் முழுநேர வேலையாக வைத்துக் கொண்டுள்ளனர். இந்தியத் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாதது அவர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் வலையை விரித்துவிட்டு மீன்களுக்காக அவர்கள் காத்திருந்த போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர்.
கடற்படைக்கு சொந்தமான 4 சிறிய ரோந்து கப்பல்களில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்தனர். அவர்கள் மீனவர்களை உடனடியாக அந்த இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இதனால் வீசிய வலைகளை மீனவர்கள் அவசரம், அவசரமாக எடுத்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
தாங்கள் அந்த பகுதியை விட்டு சென்றுவிடுவதாகக் கூறியும், படகுகளில் இறங்கிய இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்தனர். மேலும், மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசினர்.
மேலும் படகுகளில் இருந்த விலை உயர்ந்த இறால் மீன்களை அள்ளிச் சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் பயந்து போன மீனவர்கள் பாதியிலேயே அலறியடித்துக் கொண்டு கரை திரும்பினர்.