தமிழக-கேரள எல்லையில் பச்சிளம் குழந்தை விற்பனை: தாய்-தந்தை கைது, குழந்தை மீட்பு
செங்கோட்டை: தமிழக-கேரள எல்லையில் பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற தாய்-தந்தை கைது செய்யப்பட்டனர்.தமிழக-கேரள எல்லை பகுதியான புனலூரை சேர்ந்தவர் மோகனன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிந்து. அன்றாட சாப்பாட்டிற்காக அல்லல்படும் நிலை. ஆனாலும் இவர்களுக்கு வீட்டில் பொருட்செல்வம் இல்லை என்றாலும் 4 பெண் குழந்தை செல்வங்கள் இருக்கிறது. அதிக வறுமையோடு வாழ்க்கை சக்கரத்தை ஓட்டிய இவர்கள் அதிரடியாய் ஒரு முடிவு செய்து 4-வதாக பிறந்த 2 மாத பெண் குழந்தையை விற்க முயன்றனர்.
இந்த தகவல் அரசல் புரசலாக பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து புனலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் வினோத் ஏற்பாட்டின் பேரில் ஒரு காவலர் அக்குடும்பத்தினருடன் பேசியுள்ளார்.
ஒன்றரை லட்சம் தந்தால் குழந்தையை தருவதாக அவர்கள் கூறவே சம்மதித்த மப்டி காவலர் அவர்களை புனலூர் பேருந்து நிலையத்திற்கு குழந்தையோடு வருமாறு கூறி சென்றார். பேருந்து நிலையத்தி்ற்கு கைக்குழந்தையோடு மோகனன், சிந்து ஆகியோர் வந்தனர். அவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் வினோத் கைது செய்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ஒன்றரை லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்றதை தடுத்து அக்குழந்தையை புனலூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம் என்றனர்.
பணம் வளம் கொழிக்கும் மாநிலத்தில் இதுபோன்ற வறுமையோடு வாழ்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்...