ஒரு தலைக் காதலால் புதுக்கோட்டை கல்லூரி மாணவி கொலை
பேராவூரணி: ஒரு தலைக் காதலில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூர் கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மகள் வனிதா (18). இவர் புதுக்கோட்டை அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கண்ணதாசன்(21). இவர் ஆலங்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
வனிதாவும், கண்ணதாசனும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்துள்ளனர். வனிதா செல்லும், அதே பேருந்தில் தான் கண்ணதாசனும் பயணம் செய்து வந்துள்ளார். வனிதாவின் மீது கண்ணதாசனுக்கு ஒருதலைக் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகே உள்ள வயலில் உளுந்து செடி பறிக்க வனிதா சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த கண்ணதாசன் திடீரென அவரை வழிமறித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏறட்டது.
இதையடுத்து ஆத்திரமடைந்த கண்ணதாசன், வனிதாவை வாய்க்காலுக்குள் இழுத்து சென்று கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தார். அதன் பிறகு வனிதாவின் உடல் மற்றும் முகத்தில் திராவகத்தை ஊற்றி விட்டு கண்ணதாசன் தப்பிச் சென்றுவிட்டார்.
வயலுக்குப் போன மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் கலக்கமுற்றனர். இதையடுத்து அக்கம், பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வனிதா அருகேயுள்ள ஒடையில் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. அந்த இடத்திற்கு அலறியடித்துக் கொண்டு சென்ற அவரது பெற்றோரும், உறவினர்களும் வனிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தீவிர விசாரணை நடத்தி, கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர்.
இதற்கிடையே வனிதாவை இரக்கமின்றி கொன்ற கண்ணதாசன், தன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications