சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது
சென்னை: சென்னை போலீஸார் நேற்று இரவு விடிய விடிய நடத்திய பாதுகாப்பு சோதனை ஒத்திகையில் தீவிரவாதிகள் போல நடித்த நான்கு பாதுகாப்புப் படையினர் பிடிபட்டனர். இதையடுத்து ஒத்திகை வெற்றி அடைந்தது.
சென்னை நகர் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய பல்வேறு இடங்களில் தீவிர வாகனக் கண்காணிப்பு, தேடுதல் வேட்டை நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரவாதிகள் ஊடுறுவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.
கடற்கரைச் சாலை, அண்ணா சாலை, வட சென்னையின் சில பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்றது. இதில் காசிமேடு பகுதியில் தீவிரவாதிகள் போல வந்த நான்கு பேரை போலீஸார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாதுகாப்புப் படையினர் எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த முயற்சித்தாலோ அல்லது ஊடுறுவினாலோ எப்படி சமாளிப்பது என்பது தொடர்பான ஒத்திகை சோதனை இது. இதில் தீவிரவாதிகள் போல நடித்த நான்கு பாதுகாப்புப் படையினரை சரியாக பிடித்து விட்டோம். இதனால் ஒத்திகை வெற்றி பெற்றது என்றனர்.
இந்த சோதனை தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.