கீழே விழுந்த டிவிக்குள் தலை சிக்கி 2 வயது குழந்தை சாவு
சென்னை: மேஜையை பிடித்து இழுத்து விளையாடியபோது டி.வி. கீழே விழுந்து அதன் திரை உடைந்து அதற்குள் தலை சிக்கிக் கொண்டதால் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த சேகர்-தீபா தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகளும், பாவனா என்ற 2 வயது பெண் குழந்தையும் இருந்தனர்.
நேற்று குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தை பாவனா மேஜையில் இருந்த பொருட்களை இழுத்திருக்கிறாள். அப்போது மேஜையில் இருந்த டி.வி. பாவனாவின் தலை மீது விழுந்தது. டி.வியின் திரை உடைந்து பாவனாவின் தலை டி.வி. பெட்டிக்குள் சொருகிக் கொண்டது.
இதில் படுகாயமடைந்த பாவ்னா மயங்கினாள். கடைக்குச் சென்று திரும்பிய தாய் தீபா, டி.வி. பெட்டிக்குள் தலை சொருகிய நிலையில் கால்கள் மட்டும் வெளியே தெரியும் நிலையில் பாவனா அசைவற்று கிடந்ததைப் பார்த்து அலறினார்.
அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, டி.விக்குள் சிக்கிய பாவனாவை மெதுவாக வெளியே எடுத்தனர்.
பலத்த காயங்களுடன் இருந்த அவளை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் குழுந்தை பாவனா பரிதாபமாக இறந்தாள்.