தமிழகத்தில் ரூ. 13,000 முதலீட்டில் 3 புதிய தொழிற்சாலைகள்: 8,600 பேருக்கு வேலை
இதற்கான ஒப்பந்தங்கள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தாயின. இவற்றின் மூலம் 8,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் எரிவாயு தேவைகளை நிறைவு செய்வதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே காட்டுப் பள்ளி கிராமத்தில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கையாளும் திரவநிலை எரிவாயு முனையத்தை அமைக்கவுள்ளன.
அதிலிருந்து 20 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை குழாய்கள் மூலம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும், உர தொழிற்சாலைகளுக்கும் பிற தொழிற்சாலைகளுக்கும், போக்குவரத்து மற்றும் நகர்ப்புற எரிவாயு தேவைகளுக்கும் விநியோகிக்கவுள்ளன.
இதற்காக ரூ. 10,000 கோடி முதலீட்டில் புதிய தொழில் நிறுவனத்தை அமைப்பதோடு, அதன் இன்னொரு பகுதியாக மின் உற்பத்தி நிலையம் ஒன்றையும் அமைக்கவுள்ளன.
இதில் சுமார் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிறுவனம் மற்றும் மின் நிலையம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. அதில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ராஜீவ் ரஞ்சன், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் இயக்குனர் பி.எம்.பன்சல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மானாமதுரையில் வீடியோகான் தொழிற்சாலை:
அதேபோல வீடியோகான் நிறுவனம் ரூ.1,500 கோடி முதலீட்டில் எல்சிடி பிளாஸ்மா தொலைக்காட்சி உள்ளிட்ட பல வகையான மின்னணு பொருட்களையும், வீட்டு உபயோகப் பொருட்களையும், அவற்றுக்குரிய உதிரி பாகங்களையும் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை மானாமதுரை சிப்காட் தொழிற்சாலை பூங்காவில் அமைக்க உள்ளது.
இதில் 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் தொழில் துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், வீடியோகான் நிறுவனத்தின் இயக்குனர் பிரதீப் குமார் என்.தூத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில் ஜே.கே.டயர்ஸ் ஆலை:
டயர் உற்பத்தியில் உலகில் 22வது இடத்தில் உள்ள ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஜே.கே.டயர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எனும் புதிய தொழிற்சாலையை அமைக்கிறது.
ரூ.1,500 கோடி முதலீட்டிலான இந்தத் தொழிற்சாலை மூலம் சுமார் 600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் ராஜீவ் ரஞ்சன், ஜே.கே.டயர்ஸ் சார்பில் அதன் தலைவர் மற்றும் இயக்குனர் அருண் கே.பஜோரியா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, சிப்காட் நிறுவன தலைவர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி அமைப்பின் செயல் துணைத் தலைவர் எம்.வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த 3 தொழிற்சாலைகள் மூலம் சுமார் 8,600 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளன.