டாடா குழும புதிய தலைவர்... தேர்வு செய்ய 5 பேர் குழு!
71 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யமான டாடா குழுமத்தின் தலைவராக இருப்பவர் ரத்தன் டாடா. வருகிற டிசம்பர் 2012-ம் ஆண்டுடன் அவருக்கு 75 வயது பூர்த்தியாகிறது.
விரைவில் அவர் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதால் அவருக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 9 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இப்போது இந்த தேர்வுக்குழு 5 பேர் கொண்ட புதிய குழுவிடம், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
"டாடா குழுமம் என்பது நாட்டின் முக்கியமான தொழில் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை மாற்றம் என்பது மிகவும் இயல்பாகவும் முரண்பாடுகளின்றியும் நடக்க வேண்டும் என்பதே டாடா சன்ஸின் நோக்கம்" என அந்நிறுவன செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய தலைவராக வருபவர் சர்வதேச கார்ப்பரேட் பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும் என டாடா குழுமம் எதிர்ப்பார்க்கிறது. அதே நேரத்தில் அவர் டாடா குடும்பத்தை சேர்ந்தவராகவோ அல்லது டாடா குழுமத்திலோ பணியாற்றுபவராகவோ தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அதே போல அவர் எந்த நாட்டையும் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்றும் டாடா குழுமம் கூறியுள்ளது.
ரத்தன் டாடாவின் உறவினரான நோயல் டாடா சமீபத்தில்தான் டாடாவின் ட்ரெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு இவர் பெயரும் பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் பதவி உயர்வு மூலம் அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வோடபோன் முன்னாள் தலைவர் அருண் சரின், பெப்ஸிகோ சிஇஓ இந்திரா நூயி, யூனிலீவரின் கேகி டடிசேத், ரினால்ட்டின் கார்லோஸ் கோஸ்ன் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.
டாடா குழும தலைவர் பதவிக்கான நபரைத் தேர்வு செய்ய இதுபோன்ற கமிட்டி அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த 5 பேர் கமிட்டியில் ரத்தன் டாடா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இதன் வழிகாட்டியாக ரத்தன் இருப்பாராம்.
கடந்த 140 ஆண்டு காலமாக டாடா குழுமத்தின் தலைமை பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே இருந்து வந்தனர். இப்போது வெளிநபரைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பார்ஸி அல்லாத ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
1991ம் ஆண்டு டாடா குழும தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார். அன்றைக்கு நிறுவனத்தின் வருவாய் ரூ.8,553 கோடி. ஆனால் அதன் பிறகு டாடா அபார வளர்ச்சி பெற்றது. கிட்டத்தட்ட 40 மடங்கு அதிக வருவாய் ஈட்டியது ரத்தன் டாடா நிர்வாகத்தில். கடந்த 2008-2009ம் ஆண்டு டாடா குழும வருவாய் ரூ 3.46 லட்சம் கோடி!.