கரூர் அருகே தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா: கோலாகலக் கொண்டாட்டம்
கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் அருள்மிகு மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி 18 - க்கு அடுத்த நாளில் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவிற்கு பெங்களூர், திருவனந்தபுரம், டெல்லி போன்ற பல்வேறு பெரு நகரங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர்.
அவர்கள் கடந்த 18 நாட்களாக கடும் விரதம் இருந்து, கோவிலில் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வரிசையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது கோவில் பூசாரிக்கு அருள் வரவே அவர் கோவிலை மூன்று முறை வலம் வந்த பின்பு வரிசையாக உட்கார்ந்திருந்தவர்கள் தலையில் தேங்காயை டமார் என்று உடைத்து தள்ளினார். இது போன்று சுமார் 460 பேர் தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனர்.
இதில் ஒரு சிலருக்கு மண்டையில் ரத்தம் பீறிட்டு வந்தது. சிலருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது.
தலையில் தேங்காய் உடைப்பது குறித்து பெங்களூரில் இருந்து வந்த ராஜூ என்பவரிடம் கேட்ட போது,
எங்களுக்கு பூர்வீகம் தமிழகம் தான். பெங்களூரில் பிஸினஸ் பார்த்து வருகின்றோம். அதனால் குடும்பத்தோடு அங்கு உள்ளோம். இந்த திருவிழாவிற்கு நாங்கள் குடும்பத்தோடு வந்து தலையில் தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.
இப்படி செய்தால் எங்களது வீட்டிற்கு சாமி வருகை தந்து ஐஸ்வரியங்களை அள்ளித்தரும் என்பது ஐதீகம் என்று அவர் கூறினார்.
இந்த திருவிழாவை முன்னிட்டு குளித்தலை டி.எஸ்.பி. மனோகரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.













Click it and Unblock the Notifications