மகாத்மா காந்தியைப் பின்பற்றுங்கள்: ஆப்பிரிக்க இளம் தலைவர்களுக்கு ஒபாமா அறிவுரை
வாஷிங்டன்: இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் போதனைகளை பின்பற்றுமாறு ஆப்பிரிக்காவின் இளம் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆப்பிரிக்காவின் இளம் தலைவர்கள் அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களை மகாத்மா காந்தியின் போதனைகளை பின்பற்றுமாறு ஒபாமா அறிவுரை வழங்கியுள்ளார்.
அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது,
நாம் எதுவாக ஆக விரும்புகிறோமோ அதுவாகவே மாறிவிட வேண்டும் என்று மகாத்மா முன்பே சொன்னார். எனவே, உலகை மாற்ற நினைப்பவர்கள் மகாத்மா காந்தி சொல்லியதை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
உலகின் இணைப்புப் பாலமாக ஆப்பிரிக்கக் கண்டம் திகழ்கிறது என்றே நான் கருதுகிறேன். இளம் தலைவர்களாகிய உங்கள் கையில்தான் ஆப்பிரிக்காவின் எதிர்காலமே உள்ளது. இந்த உலகம் வளர்ச்சி அடைய ஆப்பிரிக்க இளைஞர்களின் அறிவும், திறமையும் தேவைப்படுகின்றது. அவற்றை நீங்கள் தான் அளிக்க வேண்டும்.
தற்போது ஆப்பிரிக்க இளைஞர்கள் பல்வேறு துறைகளில் எத்தனையோ சாதனைகளை புரிந்து கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும், ஆப்பிரிக்க இளைஞர்களின் திறமையை உலகிற்கு காட்ட கல்வி உதவி உள்பட பல்வேறு உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது. அத்தகைய உதவிகளை முறையாகப் பயன்படுத்தி இளைஞர்கள் முன்னேறப் பாதையில் செல்ல வேண்டும்.
காலனி ஆதிக்கத்தில் இருந்து கென்யா விடுதலை பெற்ற காலத்தில் தான் எனது தந்தை அங்கிருந்து அமெரிக்காவுக்கு வந்தார். அவரை அமெரிக்காவுக்கு கொண்டுவந்து சேர்த்த கருவி கல்வி. இதனால் ஆப்பிரிக்க இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.
தன்னிறைவு பெற்ற, வளமான ஆப்பிரிக்காவை காண வேண்டும் என்பதே என் விருப்பம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications