கொடநாடு எஸ்டேட்: ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளை தடுத்த அதிமுகவினர்-வழக்குப் பதிவு

கொடநாடு எஸ்டேட் வளாகத்திற்குள் ஜெயலலிதா தேயிலை தொழிற்சாலை கட்டி வருவதாகவும், இதற்கு உரிய அனுமதியைப் பெறவில்லை என்றும், மேலும் எஸ்டேட் வளாகத்திற்குள் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் உதயசந்திரனை விசாரணை அதிகாரியாக நியமித்து இதுகுறித்த விபர அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து உதயசந்திரன் உதகமண்டலத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்.
இந்நிலையில் இந்த எஸ்டேட்டை ஆய்வு செய்ய நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆய்வு செய்வதற்கான அனுமதியை எஸ்டேட் நிர்வாகத்திடம் கேட்டு பெறுவதற்காக, கோட்டாச்சியர் ராஜு, கொடநாடு ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஸ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று தேயிலை தொழிற்சாலைக்கு நேரில் சென்றனர்.
இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கொடநாடு எஸ்டேட் பகுதியில் குவிக்கப்பட்டனர்.
ஆனால், அங்கிருந்த ஏராளமான அதிமுகவினர், அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததுடன், தாக்குதலுக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தாமலேயே திரும்பிச் சென்றனர்.
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த முன்னாள் அமைச்சரும், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருமான மில்லன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெ. ஆர்ப்பாட்டத்துக்கு பூமி பூஜை:
இதற்கிடையே திருச்சியில் வரும் 14ம் தேதி அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெறும் கூட்டம் என்பதால் மிகப்பிரண்டமாக கூட்டத்தை கூட்ட அதிமுக பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறது.
இதற்காக திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்.
ஒரு லட்சம் பேரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று அவர்களிடம் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே கார்னர் மைதானத்தை தேர்வு செய்து, அதற்கான அனுமதியை நேற்று ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் வாங்கியுள்ளது அதிமுக தரப்பு.
இதையடுத்து இன்று காலை அந்த மைதானத்தில், சிறப்பு பூமி பூஜை நடைபெற்றது. பின்னர் திருவாணைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இதில் கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், திருச்சி மாநகர அதிமுக செயலாளர் மனோகர், ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications