ஊழலில் தொடர்புடையோர் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை: ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பலர், ஜூலை 14ம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.
பொதுவாக ஒருமுறை ஒருவர் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டால், அவருடைய பெயரை எப்படி மறுபடியும் வேலை வாய்ப்பு அலுவலகம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பரிந்துரை செய்ய முடியும்? ஒருவரை எப்படி இருமுறை தேர்வு செய்ய முடியும்?. ஒருவருக்கு எப்படி இரண்டு வேலை அளிக்க முடியும்?.
முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறாத பலர் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக ஒரு இடத்திற்கு ஐந்து பேர் என்ற வீதத்தில், 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர் தான் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இதே போன்று, கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 196 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள பத்து பணியிடங்களில் யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இதுபோன்ற கேள்விகள் எல்லாம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கனவே எழுப்பப்பட்டு விட்டன. பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கிறது.
இது மட்டுமல்லாமல், போலிகளின் வரிசையில், போலி மதிப்பெண் சான்றிதழ் வேறு சேர்ந்துவிட்டது. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இதன் விளைவாக கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவரை பார்வையாளர்கள் என்ற போர்வையில் சில மர்ம நபர்கள் சந்தித்து உண்மையைச் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள் யார் என்ற விவரத்தை காவல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மட்டும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஜெ. பாதுகாப்புக்கு 23,400 பேர்:
இந் நிலையில் திருச்சியில் வரும் 14ம் தேதி நடக்கும் அதிமுக ஆர்பாட்டத்தில் பங்கேற்க வரும் ஜெயலலிதாவுக்கு தலைமையில் 23,400 ஜெயலலிதா பேரவை உறுப்பினர்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனராம்.
இதற்காக அவர்களுக்கு கருப்பு, சிவப்பு, வெள்ளையில் சீருடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் சேர்ப்பது தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் ஜெ.பேரவை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் மனோகர், ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த பேரவை நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா இடங்களிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கழக பாடல்களை ஒலிக்க விடுங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அம்மா தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் அதை உறுதி செய்யும் அதனால்தான் சிலர் இப்போதே தொகுதி மாற யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், அம்மாவின் பாதுகாப்புக்கு 234 சட்டமன்ற தொகுதிக்கு 100 ஜெ. பேரவை நிர்வாகிகள் வீதம் 23,400 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications