8 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பங்குச் சந்தை பாடம்!
சென்னை: 8-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிதிக்கல்வி பற்றிய கற்பிக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்கிறது. இதில் பங்குச் சந்தை, பரஸ்பர நிதி, வங்கியியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் போதிக்கப்படும்.
கல்லூரி படிப்பை தொடங்கு வதற்கு முன்பே மாணவர்கள் நிதிக்கல்வியை அடிப்படைக் கல்வியாக அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை.
மும்பை தேசிய ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டிலேயே (2010-2011) 182 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப் படுகிறது. 16 மாவட்டங்களில் உள்ள ஆங்கில வழிகற்றல் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது.
76 அரசு பள்ளிகளிலும், 106 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல் கட்ட மாக 'நிதி கல்வியறிவு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. பணம், பங்குச் சந்தை குறித்து மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும். நிதி கல்வி பற்றி பாடங்களை தேசிய பங்கு சந்தை நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இந்த புதிய இணைப்பை உள்ளடக்கிய பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சடிக்கிறது. பங்குச் சந்தை குறித்த முழு விவரங்களும் 25 வகுப்புகள் மூலமாக கற்பிக்கப்படும். 6 வகுப்புகள் பயிற்சி வகுப்புகளாக நடத்தப்படும். மாணவர்களுக்கு நிதி கல்வியறிவு குறித்த பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் குறைந்தது 10 கம்ப்யூட்டர்களுடன் ஆய்வகம் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஷேர் மார்க்கெட் பற்றி கற்பிக்க பள்ளி ஆசிரியர்களுக்கும் தனி பயிற்சி அளிக்கப்படுகிறது. தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்வர்.
முதல் கட்டமாக 182 பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சிக்கான செலவை மத்திய அரசின் 'ராஷ்ட்ரிய மத்திய மிக்சிக்ஷா அபியான் கல்வித்திட்டம்' மற்றும் ஆசிரியர் கல்வி பயிற்சி ஆராய்ச்சி இயக்ககம் செலவிடுகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வி த்துறை செயலாளர் குற்றாலம் இதற்கான அரசு ஆணையை நேற்று வெளியிட்டுள்ளார்.