பிரணாபுக்கே வீட்டு லோன்-தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளை தடை செய்ய ராஜா உத்தரவு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் அமளியை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு வந்த செல்போன் அழைப்பில் வீட்டுக் கடன் தேவையா என்று கேட்டதால் டென்ஷனாகி விட்டார் பிரணாப்.
இந்த பிரச்சினை நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்போது பேசிய அமைச்சர் அம்பிகாசோனி, இதுபோன்ற அழைப்புகளைத் தடுக்க வசதி உள்ளது. அதை நான் செய்துள்ளேன். ஆனால் அதையும் மீறி வருகிறது. இதைத் தடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார்.
பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், ஒரு நாளைக்கு 40 அழைப்புகள் வரை எனக்கு வருகிறது. இப்போது நிதியமைச்சருக்கே வந்து விட்டது. இதைத் தடுத்தாக வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ரஷீத் கூறுகையில், மிகவும் முக்கியமான நேரங்களில்இதுபோன்ற தேவையற்ற அழைப்புகள் வருவது பெரும் தொல்லையாக உள்ளது என்றார்.
பல்வேறு எம்.பிக்களும், இந்த தேவையற்ற அழைப்புகளால் ஏற்படும் அவஸ்தையை ஒரே குரலில் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தனர். இதையடுத்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா, தேவையற்ற அழைப்புகளை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தொலைத் தொடர்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை செயலாளர் பி.ஜே. தாமஸுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இனிமேல் செல்போன்களுக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வருவது முழுமையாக தடை செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications