வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மும்முனைப் போராட்டம்-டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: திமுக கூட்டணி அரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களுக்கு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மும்முனைப் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அ.தி.மு.க. தலைமையில் மெகா வெற்றிக் கூட்டணி அமைவதற்கு ஜெயலலிதா முயற்சி எடுத்து வருவதையும், அந்த கூட்டணியில் முதன் முதலாக புதிய தமிழகம் கட்சியை இடம் பெற செய்ததையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அ.தி.மு.க. கூட்டணியில் எங்கள் கட்சிக்கு மட்டும் அல்ல, எல்லா கட்சிகளுக்கும் நியாயமான இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட தி.மு.க. தவிர, தொல்.திருமாவளவன் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணியில் சேரவேண்டும்.
2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் நிலமற்ற ஏழை மக்களுக்கு குடும்பத்திற்கு தலா இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் வழங்கும் என்றும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 3 சென்ட் வீட்டுமனை வழங்கும் என்றும் வாக்குறுதி அளித்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இன்னும் 6 மாத காலத்தில் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் மும்முனை போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். 2011-ம் ஆண்டு ஜனவரிமாதம் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு தேர்தல் சிறப்பு மாநாடாக நடத்தப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி கூட்டணி கட்சி தலைவர் ஜெயலலிதாவை அழைப்போம்.
மின் கட்டண உயர்வை கண்டித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து புதிய தமிழகம் போராட்டம் நடத்தும். ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க. இளைஞர் அணியினர் நடத்திய போராட்டம் விநோதமானது. இப்படிப்பட்ட போராட்டம் தொடருமானால் புதிய தமிழகம் எதிர் போராட்டம் நடத்தும் என்றார் அவர்.