யு.எஸ். தீவிரவாதப் பட்டியலில் ஹூஜி-பொருளாதாரத் தடை
வாஷிங்டன்: அமெரிக்காவின் தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூஜி தீவிரவாத அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் வரிசையில் இதை சேர்த்துள்ள அமெரிக்கா அந்த அமைப்புக்கு பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.
ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்ற ஹூஜி தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. வங்கதேசத்திலும் இது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இந்தியாவைக் குறி வைத்து பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் முகம்மது இலியாஸ் காஷ்மீரி. இவருக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதையடுத்து தற்போது ஹூஜி அமைப்புக்கும், காஷ்மீரிக்கும் தடை விதித்துள்ளது அமெரிக்கா.
இந்தியாவில் ஹூஜி அமைப்பும், காஷ்மீரியும் பல தீவிரவாத செயல்களை நிகழ்த்தியுள்லனர். ஹைதராபாத்தில் 2007ல் மசூதியில் நடந்த வெடிகுண்டு விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். 2007 மார்ச்சில் வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்பு. அதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
மும்பையில் நடந்த பயங்கரவாத சம்பவத்திலும் கூட காஷ்மீரிக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி பல சம்பவங்களிலும் காஷ்மீரிக்கும், ஹூஜிக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தபோதும் அதுகுறித்து அமெரிக்கா கவலைப்படவில்லை. ஆனால் டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கும், ஹூஜிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிய வந்ததைத் தொடர்ந்து தற்போது ஹூஜியை அமெரிக்கா தீவிரவாத இயக்கமாக் அறிவித்து தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து ஐ.நா.வும் ஹூஜி மற்றும் காஷ்மீரிக்குத் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications