கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
கோவில்பட்டி: கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானான்.
கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த முகமது என்பவரின் மகன் அன்வர் பாட்ஷா. நேற்று மதியம் 1 மணிக்கு நண்பர்களுடன் இவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள பாழைடந்த கிணற்றுக்குள் பந்து விழுந்தது. அதை எடுக்க சிறுவன் அன்வர் பாட்ஷா படிகள் வழியாக கிணற்றுக்குள் இறங்கினான். அப்போது தவறி தண்ணீரில் விழுந்த அவன் நீ்ச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தான்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த கிணற்றுக்குள் இறங்கி சிறுவனின் உடலைத் தேடினர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வேலாயுதபுரம் மெயின்ரோட்டில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் மாரிராஜ், எஸ்.ஐ. கிருபா, கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியலால் கோவில்பட்டி-சாத்தூர் ரோட்டில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை 5 மணி வரை தேடியும் சிறுவனின் உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து தூத்துக்குடியி்ல் இருந்து முத்துகுளிக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications