ஆப்கானிஸ்தானில் 10 வெளிநாட்டு மருத்துவக் குழுவினர் சுட்டுக் கொலை
காபூல்: கிழக்கு ஆப்கானி்ஸ்தானில் மருத்துவ உதவிகள் செய்து கிருஸ்துவ மருத்துவக் குழுவைச் சேர்ந்த பெண் டாக்டர், இரு பெண் நர்ஸ்கள் உள்ளிட்ட 10 பேரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதி்ல் 6 பேர் அமெரிக்கர்கள், 2 பேர் ஆப்கானியர்கள், ஒருவர் ஜெர்மன் மற்றும் ஒரு இங்கிலாந்து டாக்டர் ஆகியோர் அடங்குவர். கொல்லப்பட்டவர்களில் 3 பேர் பெண்கள்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் மலைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இவர்கள் 2 வாரம் மருத்துவ முகாம்களை நடத்திவிட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களைக் கடத்திச் சென்று தலிபான்கள் கொன்றனர்.
இவர்கள் அமெரிக்க-பிரிட்டிஷ் உளவாளிகள் என்றும், மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் ஷபியுல்லா முஜாகித் குற்றம் சாட்டியுள்ளார்.
இவர்களுடன் சென்ற ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டிரைவரை மட்டும் அடித்து உதைத்ததோடு உயிரோடு விட்டுவிட்டனர் தலிபான்கள்.
இது குறித்து பன்னாட்டு உதவி மையத்தின் இயக்குனர் டிர்க்பிரான்ஸ் கூறுகையில், இவர்கள் தன்னார்வ கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சார்பற்ற நிறுவனம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கடந்த 1966-ம் ஆண்டு முதல் தொண்டாற்றி வருகிறது.
இது போன்ற கொடூர செயல்களால் எங்களின் சேவையை தடுத்து நிறுத்திவிட முடியாது. தொடர்ந்து லட்சக்கணக்கான ஆப்கன் மக்களுக்கு சேவை செய்வோம் என்றார்.
ஆனால், இந்தத் தாக்குதலையடுத்து மருத்துவ முகாம்களை நிறுத்துமாறு அமெரிக்கப் படைகள் உத்தரவிட்டுள்ளன.