பி.இ. மாணவர்கள் திடீர் போராட்டம்: கல்லூரிப் பேருந்துகள் சேதம்
திருப்போரூர்: திருப்போரூர் அருகில் உள்ள பாலாஜி பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று காலை திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். அப்போது கல்லூரிப் பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
திருப்போரூரை அடுத்த தண்டலத்தில் உள்ளது பாலாஜி பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை, பேராசிரியர்கள் இல்லை, அலுவலக ஊழியர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலை மாற வேண்டும், கல்லூரி முதல்வரையும், நிர்வாக அதிகாரியையும் மாற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது கல்லூரி பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. கல்லூரிப் பலகைகளும் அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
திருப்போரூர் மாமல்லபுரம் சாலையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் குறித்து மாணவ மாணவிகள் கூறியதாவது:
இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகளும், ஆசிரியர்களும் இல்லை. மாணவ மாணவிகளை மதிக்காமல் மோசமாக நடத்துகின்றனர். எங்களை மட்டுமின்றி எங்கள் பெற்றோர்களையும் உதாசினப்படுத்துகிறார்கள். கல்லூரி முதல்வரையும், நிர்வாக அதிகாரியையும் மாற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. அதனால் தான் போராட்டம் நடத்துகின்றோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அவர்கள் கூறினர்.