பிரச்சாரம்: மோடி, வருணுக்கு ஐக்கிய ஜனதா தளம் தடை
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடந்தது. கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் நிருபர்களிடம் பேசுகையில்,
தொகுதிகளைப் பகிர்ந்துக் கொள்வது தொடர்பாக கடந்த சட்டசபைச் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் எந்தவிதமான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதோ அதே ஒப்பந்தம் இந்தத் தேர்தலிலும் தொடரும்.
அதே போல பிரசாரம் செய்வது தொடர்பாகவும் பழைய ஏற்பாடே தொடரும். அதுவே பொருந்தும் என்றார்.
அப்படியானால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரச்சாரத்துக்கு வர முடியாதா என்று கேட்டதற்கு, அதைத் தான் சொல்லிவிட்டேனே என்றார்.
வருண் காந்தி பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படுவாரா என்று கேட்டதற்கு யார் இந்த வருண் காந்தி? என்று கேள்வி எழுப்பினார் யாதவ்.
2002 குஜராத் மதக் கலவரத்துக்குப் பின், பிகாரில் நடந்த எந்தவொரு தேர்தலிலும் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
முஸ்லிம் வாக்குகளைப் பெற லாலு, காங்கிரசுடன் போட்டி போட்டி வரும் ஐக்கிய ஜனதா தளம், கடந்த தேர்தல்களில் மோடி பிரசாரத்துக்கு வருவதை அனுமதிக்கவில்லை.
இந் நிலையில் பழங்குடியினருக்கு என தனி நிதி உருவாக்கப்பட்டுள்ளதைப் போல முஸ்லிம்களுக்கும் தனி நிதி உருவாக்க ஐக்கிய ஜனதா தளம் திட்டமிட்டு வருகிறது.
மேலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடும், முஸ்லிம்களிலும், கிறிஸ்தவர்களிலும் உள்ள பின்தங்கியவர்களை எஸ்.சி, எஸ்.டி. என அறிவிக்கவும் பரிந்துரைத்துள்ள ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தவும் அம் மாநில முதல்வர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார்.
இதற்கு அதன் கூட்டணிக் கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதை நிதிஷ் மதிக்கவில்லை.
இந்நிலையில் நரேந்திர மோடி, வருண் காந்திக்கும் பிரசாரத்துக்கு வர தடை போட்டுள்ளார் நிதிஷ் குமார்.