அரசு ஊழியர்கள் விவகாரத்தில் அதிமுக வழியில் நடக்கும் திமுக-தா.பாண்டியன்
திருவாரூர்: அரசு ஊழியர்கள் விவகாரத்தில் அ.தி.மு.க. அரசை பின்பற்றுகிறது தி.மு.க. அதிமுக செய்த அதே தவறைத்தான் திமுகவும் செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில அமைப்புநிலை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது,
அரசு ஊழியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும். போராட்டத்தை தொடங்குவது எளிது. ஆனால், அதை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவதுதான் கடினம். ஒரு கோரிக்கையை வைப்பதற்கு முன்பாக நமது பலம் எவ்வளவு என்பதை காட்ட வேண்டும்.
நாட்டில் அரசியல் கட்சிகள் போன்று தொழிற்சங்கங்களும் பெருகிவிட்டன. இதில் எந்த சங்கம் உரிமைகளை பெற்றுத் தருகின்றதோ அதில் இணைந்து செயல்பட வேண்டும்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் ஆகியவற்றை கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனாலும், வேறு ஊழியர்களைக் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிகிறது.
கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அப்போதைய ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்ட அதே முடிவு போலத்தான் இதுவும் உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் தங்களது பலத்தால், செய்கைகளால் வெற்றி பெற வேண்டும்.
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
ஆட்சியாளர்கள் மாறினாலும், அரசு மாறினாலும் உரிமைக்காக போராட அஞ்சமாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications