காமன்வெல்த் ஊழல்-விசாரணையை மேலும் தீவிரமாக்க அமலாக்கப் பிரிவு முடிவு
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழு நடத்தியுள்ள மிகப் பெரிய அளவிலான ஊழல்கள் குறித்து சரமாரியாக செய்திகள் வெளியாகி வருவதால் இதுகுறித்த விசாரணையை அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தவுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் அக்டோபர் மாதம் 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்த பல்வேறு அமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் போட்டி ஏற்பாடுகளில் பெரிய அளவில் ஊழல்கள் செய்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறையும், மத்திய கணக்கு தணிக்கைத் துறையும் கண்டுபிடித்து வெளிப்படுத்தியது. இதையடுத்து போட்டி ஏற்பாட்டுக் குழுவில் இருந்து இணை இயக்குனர் டி.எஸ்.தர்பாரி நீக்கப்பட்டார். இவர் சுரேஷ் கல்மாடியின் மிக நெருங்கிய கூட்டாளி ஆவார்.
நேற்று அவரிடம் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தர்பாரி தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
ஆனால், லண்டனில் காமன்வெல்த் ஜோதி ஓட்டம் தொடக்க விழா நடத்தப்பட்டதில் நடந்த ஊழலில் தர்பாரிக்கு நேரடி தொடர்புள்ளதாக மத்திய அமலாக்கப் பிரிவினர் கூறி வருகிறார்கள். மேலும், காமன்வெல்த் போட்டி ஏற்பாடு ஊழல்களுக்கு இவர்தான் மூலதாரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் மீது விசாரணை பிடி இறுகி வருகிறது.
இதற்கிடையே தர்பாரி போல மற்றக்குழுக்கள் பொறுப்பாளர்களும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த அமலாக்க பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அப்போது மேலும் சில ஊழல் பூதங்கள் கிளம்பும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் சுரேஷ் கல்மாடி, போட்டி ஏற்பாடு ஊழல்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று மீண்டும் கூறியுள்ளார். இது குறித்து அவர் பாராளுமன்ற எம்.பி.க்கள் அனைவருக்கும் விரிவான கடிதம் எழுதி உள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இந்த பிரச்சினை எதிரொலித்ததால், போட்டி ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications