69% இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு
வாய்ஸ் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து இந்த அமைப்பு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தது. இந் நிலையில் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அனுமதித்து கடந்த ஜூலை 13ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து இந்த அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இடஒதுக்கீட்டை எதிர்த்து இந்த அமைப்பு தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தான், 69 சதவீத இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அது அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய முடியாது. ஆனாலும் தமிழக அரசின் 1993ம் ஆண்டு இடஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஒரு சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அது உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்று 2007ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும் 1993ம் ஆண்டிலிருந்தே இந்த அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்து வந்தது. அதில் விடுக்கப்பட்ட கோரிக்கைப்படி தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் கூடுதலான இடங்களுக்கு சமமான இடங்கள் பொதுப் பட்டியலிலும் அதிகரிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில்தான் இந்த ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை ஆதாரங்களின் அடிப்படையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு தெரிவிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு அளவை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ப மாநில அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி வாய் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.