காஷ்மீரில் வேலைவாய்ப்புகளை உருவாக்க நிபுணர் குழு: இன்போஸிஸ் நாராயணமூர்த்திக்கும் இடம்
இதில் இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, சிஐஐ அமைப்பின் முன்னாள் தலைவர் தருண் தாஸ், காஷ்மீர் பிரிவு தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஷகீல் கலாந்தர் நந்தகுமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு சார்பில் ஒரு பிரதிநிதியும் குழுவில் இடம் பெறுவார்.
காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து 3 மாதங்களுக்குள் இந்தக் குழு தனது ஆய்வை முடித்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கும்.
நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்த பின்னர் இந்த நடவடிக்கையை பிரதமர் எடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் கூறுகையில், தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து இந்தக் குழு ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை கொடுக்கும்.
தங்களது ஆய்வின் ஒரு பகுதியாக தேசிய திறனாய்வு வளர்ச்சி அமைப்புடனும் இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள்.
இந்தக் குழுவின் பரிந்துரை எதுவாக இருந்தாலும், இதை வெற்றிகரமாக அமல்படுத்துவது என்பது அனைத்து இளைஞர்களையும், வேலைவாய்ப்பு வளையத்திற்குள் ஈர்ப்பதில்தான் உள்ளது. அனைவருக்கும் நம்பிக்கையூட்ட வேண்டும். சரியான இலக்கைக் காட்ட வேண்டும். அவர்களுக்குரிய சந்தர்ப்பங்கள் சரியான முறையில் கிடைக்கச் செய்திட வேண்டும் என்றார் பிரதமர்.
பிரதமர் அமைத்துள்ள நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள அனைவருமே தொழில் துறையில் நிரம்பிய அனுபவம் பெற்றவர்கள். ஆனால், இவர்களால் ஜம்மு காஷ்மீர் மாநில பிரச்சினைக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பது தெரியவில்லை.
78 வயதான ரங்கராஜன் பொருளாதார நிபுணர் ஆவார். அதேபோல நாராயணமூர்த்தி தகவல் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்றவர். 71 வயதாகும் தருண் தாஸ், சிஐஐ அமைப்பின் குரலாக கிட்டத்தட்ட 46 ஆண்டு காலம் விளங்கியவர்.
சிஐஐ அமைப்பு இதுவரை இந்தியாவுக்கு பெரிய அளவில் எந்த நல்லதையும் செய்யவில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கும், காஷ்மீர் பிரச்சனைக்கும் எந்த வகையில் பொருத்தம் இருக்கிறது என்பது தெரியவில்லை.
இவர்கள் காஷ்மீர் பிரச்சனையை முழுவதுமாக உள்வாங்கி, அந்த மாநில இளைஞர்களின் மன ஓட்டம், சிக்கல்கள், சவால்களை உணர்ந்து, அந்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, தொழில் அமைதி ஆகியவை குறித்து சரியாக ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க வேண்டும். அதை இவர்களால் செய்ய முடியுமா?.