நிலத் தகராறில் பணம் கேட்பதாக சிபிஎம் பெண் எம்.எல்.ஏ. மீது திமுக-அதிமுக புகார்
வேலூர்: நிலத் தகராறில் தலையிட்டு ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குடியாத்தம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் எம்.எல்.ஏ. லதா மீது மீது திமுக பிரமுகரும் அதிமுக கவுன்சிலரும் புகார் கூறியுள்ளனர்.
குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்த செல்வம் திமுக பிரமுகர் ஆவார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் கலெக்டர் ராஜேந்திரனிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
குடியாத்தம், 5வது வார்டு, தாழையாத்தம் பகுதியில் நான் 3.29 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அந்த இடத்தில் அப்பகுதியை சேர்ந்த 35 பேர் குடிசை வீடுகள் கட்டியிருந்தனர். அவர்களுக்கு தாழையாத்தம் பஞ்சாயத்து நத்தம் கிராமத்தில் மனைகள் ஒதுங்கி கொடுத்து ஓலை வீடுகள் கட்டிக் கொடுத்தேன்.
7 பேர் மட்டும் தங்களுக்கு வீட்டுமனை வேண்டாம் என்றதால் அவர்களுக்கு தலா ரூ.40,000 வீதம் வாங்கிக் கொண்டனர்.
அவர்கள் குடியாத்தம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. லதாவின் தூண்டுதலின் பேரில் கலெக்டரிடம் என் மீது பொய் புகார் கொடுத்தனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை செய்தார்.
இந்த விவகாரம் குறித்து அதிமுக கவுன்சிலர் பார்திபனிடம் கூறினேன். அவர் எம்.எல்.ஏ. லதாவிடம் போன் மூலம் விசாரித்தார். அப்போது, நான் இந்த தொகுதி எம்.எல்.ஏ. என்றும், நில விவகாரத்தை சரி செய்ய ரூ.20 லட்சம் வாங்கி வருமாறும் கவுன்சிலரை மிரட்டினார்.
நான் லதாவுக்கு பணம் தர மறுத்தேன். இதையடுத்து கடந்த 29ம் தேதி இரவு எம்.எல்.ஏ. லதா சில ஆட்களை அனுப்பி என் நிலத்திலும, நகராட்சிக்குச் சொந்தமான இடத்திலும் வைத்திருந்த மரக் கன்றுகள், தொட்டிகளை உடைத்ததுடன், முள்வேலியையும் நாசம் செய்து விட்டார்.
இது குறித்து குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.
ஆகஸ்ட் 7ம் தேதி மாலை லதா, என் நிலத்தை வீடியோ எடுத்து சென்றுள்ளார். எனவே இது குறித்து விசாரணை செய்து என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
லதாவுக்கு எதிராக அதிமுக கவுன்சிலரும் மனு:
அதே போல அதிமுக கவுன்சிலர் பார்த்திபனும் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், ஆகஸ்ட் 10ம் தேதி மாலை 7 மணிக்கு மேல் ஆலத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் என்னை வழிமறித்து எம்.எல்.ஏ. லதா கேட்ட ரூ.20 லட்சத்தை செல்வத்திடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டியதுதானே என்று கேட்டு மிரட்டினர்.
எனவே லதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுத்து என் குடும்பத்துக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.