For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக கூட்டுறவு-பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ரூ.11 கோடி இடைக்கால நிவாரணம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ரூ.11 கோடி இடைக்கால நிவாரணம் வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நடைமுறையில் இருந்த ஊதிய ஒப்பந்த காலத்தினை 5 வருடத்திலிருந்து 3 வருடங்களாக குறைத்து, அதாவது ஊதிய ஒப்பந்த கால வரையறையினை 31.3.2010 ஆக இருந்ததை 2 வருடம் குறைத்து 31.3.2008 ஆக மாற்றியமைத்து, 9.10.2009 அன்று அரசு ஆணை பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதிய விகிதத்தினை மாற்றி அமைப்பதற்குரிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக 16.10.2009 அன்று சர்க்கரைத் துறை ஆணையரால் ஊதிய மறு நிர்ணயக்குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையே தமிழ்நாடு அனைத்துக் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைப் பணியாளர்களின் பேரவை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் செயல்படும் தொழிற்சங்கங்களுக்குத் தேர்தல்களை நடத்திட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் மீது, உயர் நீதிமன்றம் மேற்படி தொழிற்சங்கங்களுக்கு மூன்று மாத காலத்திற்குள் தேர்தல்களை நடத்தி, கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் ஊதிய மறுநிர்ணயம் மற்றும் அனைத்து விவகாரங்களுக்கும் அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

இந்த ஆணையின்மீது இரண்டு தொழிற்சங்கங்கள் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இடைக்காலத் தடையாணைகள் பெற்றன.

இந்நிலையில், தனியார் சர்க்கரை ஆலைகள் 1.4.2008 முதல் ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, அங்குள்ள தொழிலாளர்கள் ஊதிய உயர்வுகளைப் பெற்றனர்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைப் பணியாளர்கள் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் இறுதி முடிவுகள் கிடைக்க நாளாகும் என்பதால், தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வின் அடிப்படையில் தங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்று கோரினர்.

இந்தக் கோரிக்கை குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து 90 சதவீதத் தொகையை இடைக்கால நிவாரணமாக வழங்கலாம் என அறிவுறுத்தி, அதற்குத் தேவையான முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்புமாறு சர்க்கரைத்துறை ஆணையரைக் கேட்டுக் கொண்டார்.

சர்க்கரைத்துறை ஆணையர் அனுப்பிய முன்மொழிவுகளை பரிவோடு பரிசீலனை செய்த முதல்வர் கருணாநிதி, 1.4.2008 முதல் தனியார் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வின் அடிப்படையில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் பருவகாலப் பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 90 சதவீதத் தொகையை ரொக்கமாக ஒரே தவணையில் வழங்கிடவும்,

1.7.2010 முதல் மாதந்தோறும் ஊதியத்தில் சேர்த்து வழங்கிடவும், இடைக்கால நிவாரணம் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டவுடன் அளிக்கப்படவுள்ள நிலுவைத் தொகையிலிருந்து சரிகட்டப்படும் என்றும் ஆணையிட்டுள்ளார்.

இதனால் 5,977 பணியாளர்களுக்கு ரூ. 10.99 கோடி இடைக்கால நிவாரணமாகக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X